முகப்பு
சென்னை

தமிழகத்தின் தியாக தீபங்கள் - 129: சா.கணேசன்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 6.6.1908-இல் பிறந்தார் கம்பன் அடிப்பொடி சா.கணேசன்.

Updated On : 23 டிசம்பர், 2021 at 5:29 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 6.6.1908-இல் பிறந்தார் கம்பன் அடிப்பொடி சா.கணேசன். காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் 1919-இல் உரை நிகழ்த்தியும் பாட்டுப் பாடியும் பரவசத்தை ஏற்படுத்தினார் மகாகவி பாரதி. அந்நிகழ்வை 11 வயது பாலகனாகப் பார்த்தும் கேட்டும் உள்வாங்கியவர் சா.கணேசன்.
1920-இல் சுப்பிரமணிய சிவா காரைக்குடியில் தங்கியிருந்து தனது உரைகளால் விடுதலை உணர்ச்சியை விதைத்தார். அவ்வுரைகள் பலவற்றை நேரில் கேட்டு உருவானவர் கணேசன்.
தனது தந்தையின் தொழிலைக் கவனித்துக்கொள்ள 14 வயதில் பர்மா (மியான்மர்) போனார். அங்கு தமிழ்ச் சங்கம் அமைத்தது, சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தது, வாசிப்பை வளப்படுத்தியது போன்ற அவரின் செயல்கள் பின்னாளில் செய்த பணிகளுக்கு அடித்தளங்களாயின. பர்மாவில் ஏ.கே.செட்டியார், வெ.சாமிநாத சர்மா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார். 
தாயகம் திரும்பிய கணேசன் 1927-இல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்திருந்தபோது அவருக்குப் பணிவிடை செய்தார். 1935-இல் காரைக்குடியில் நடைபெற்ற மாகாண காங்கிரஸ் மாநாட்டின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 
1941 தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்று காரைக்குடியிலிருந்து தில்லி நோக்கி பாதயாத்திரையாகப் புறப்பட்ட கணேசன் 66 நாள்களில் 568 மைல்கள் நடந்தே கடந்த நிலையில் கைதானார். அலிப்புரம் சிறையில் 4 மாதங்கள் அடைக்கப்பட்டார்.
கானாடுகாத்தானில் நிகழவிருந்த, தடையை மீறிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தீரர் எஸ்.சத்தியமூர்த்தி, டாக்டர் ப.சுப்பராயன் ஆகியோருடன் சென்றபோது தடையை மீறினால் சுட்டுவிடுவதாக போலீஸார் மிரட்டினர். ஆவேசத்தில் தனது சட்டையைக் கிழித்து நெஞ்சைத் திறந்து காட்டி "சுடுங்கள்' என்று அஞ்சாது நின்றார். அன்றிலிருந்து கடைசிவரை சட்டை அணிவதையே தவிர்த்துவிட்டார்.
1942 "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். போராட்டத்தை முறைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் மாறுவேடத்தில் பல இடங்களுக்குப் பயணித்து போராளிகளைக் களமிறக்கினார். இவர்தான் உக்கிரமான போராட்டங்களுக்கான சூத்திரதாரி என்பதையறிந்த போலீஸார் அவரைப் பிடிக்க முடியாத ஆத்திரத்தில் அவரின்  வீட்டைச் சூறையாடினர்.
பல இடங்களில் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பின்னர், போராளிகள் பலர் கைதான பிறகு சென்னையில் சரணடைந்தார். இரண்டேமுக்கால் ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீண்டும் அலிப்புரம் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.
1939-இல் காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்த சா.கணேசன் 1940 முதல் தனது இறுதிக் காலம் வரை தமிழ் உலகின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் கம்பன் விழாவை விமரிசையாக ஆண்டுதோறும் நடத்தினார்.
விடுதலைக்குப் பிறகு 1962-இல் சட்டப்பேரவை உறுப்பினராகவும் 1968-இல் மேலவை உறுப்பினராகவும் விளங்கினார்.
காங்கிரûஸயும் கம்பனையும் இரண்டு கண்களாகப் பாவித்த சா.கணேசன் 28.7.1982-இல் 74-ஆவது வயதில் மறைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.