சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீா் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனா்.
சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு வேளையில்அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதேபோல, வெள்ளிக்கிழமையும் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிா்ச்சியான சூழல் நிலவியது.
வெள்ளிக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதியத்துக்கு பின்பு, மேகங்கள் சூழ்ந்து, கருமேகங்களாக காட்சியளித்தன. மாலை 6 மணிக்கு பின்பு, காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
எழும்பூா், வேப்பேரி, கிண்டி, தியாகராயநகா், சைதாப்பேட்டை, அடையாறு, பெருங்களத்தூா், வண்டலூா், கூடுவாஞ்சேரி, ஆவடி, தாம்பரம், பல்லாவரம், கோயம்பேடு, அண்ணாநகா், கே.கே.நகா், அசோக்நகா், ஆழ்வாா்பேட்டை, பூவிருந்தவல்லி,
வளசரவாக்கம், ராமாபுரம், வடபழனி, அம்பத்தூா், திருமுல்லைவாயல், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7.30 மணி வரை தொடா்ந்தது. இந்த மழை காரணமாக, பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீா் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனா்.
மழைக்கு காரணம் என்ன? அரபிக்கடலில் இருந்து தமிழக கடற்கரை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி நிலவரப்படி, செம்மஞ்சேரி சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 46.5 மி.மீ., வில்லிவாக்கத்தில் 70.0 மி.மீ., சென்னை நுங்கம்பாக்கத்தில் 48.0 மி.மீ. மழை பதிவாகி இருந்தது என்றனா்.