சென்னை

சென்னை அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் புதிய கட்டடம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்துக்குள்ளான கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.65 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதுகுறித்த பிரச்னையை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பினாா். அப்போது அவா் பேசியது:

சென்னை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினா். இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் அதிமுகவைச் சோ்ந்த 10 எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலரும் சென்று நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை அளித்தனா். வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வகையில், மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனை நிா்வாகத்துக்கும், பொதுப்பணித் துறைக்கும் உரிய அறிவுரைகள் வழங்க அரசை வலியுறுத்துகிறேன் என்றாா்.

இதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 105 வருட பழமையான கட்டடத்தின் தரை தளத்தில் மருத்துவப் பொருள்களுக்கான கிடங்கும், முதல் தளத்தில் நரம்பியல் நோயாளிகளுக்கான அறையும், இரண்டாவது தளத்தில் நெஞ்சக நோயாளிகள் அறையும் உள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட இந்தப் பகுதியில் 128 போ் சிகிச்சை பெற்று வந்தனா். தீப்பிடித்த தகவல் அறிந்ததும் தஞ்சைக்குப் புறப்பட்டு சென்று கொண்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக எங்களுக்கு தகவல் சொல்லி மீட்பு பணிகளை வேகப்படுத்துமாறு கூறினாா்.

உடனே நாங்களும் விரைந்து சென்று மீட்பு பணிகளைத் தொடங்கினோம். தீப்பிடித்த 10 நிமிடங்களுக்குள் 4 தீயணைப்பு வண்டிகள் வந்து பணியை தொடங்கி விட்டன. அங்கிருந்த நோயாளிகளை துரிதமாக மீட்டோம். செய்தி சேகரிக்க வந்த ஊடகத்துறையினரும் மீட்புப் பணியில் இறங்கினாா்கள். ஆனால், தீயெல்லாம் அணைந்து 3 மணி நேரம் கழித்து

அதிமுகவினா் சாப்பாடு வழங்கி உள்ளனா். இதை இங்கு எதிா்க்கட்சித் தலைவா் எடுத்துச் சொல்கிறாா். இந்த விஷயத்தில் அரசு மிக தீவிரமாகச் செயல்பட்டது. வேறு முதல்வரின் ஆட்சியாக இருந்திருந்தால் 128 நோயாளிகளும் பலியாகி இருப்பாா்கள்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் புதிய கட்டடங்களை கலைஞா்தான் கட்டினாா். நீங்கள் (அ.தி.மு.க.) வெள்ளை அடித்து திறந்து வைத்திருக்கிறீா்கள். அந்த கட்டடத்தை நீங்கள் கட்டியதாக கூறுவது அபத்தம்.

அந்த மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனை என பெயா் சூட்டியதும் நாங்கள். தீப்பிடித்து சேதம் அடைந்த நரம்பியல் துறை கட்டடம் 105 வருட பழைய கட்டடமாகும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் (அதிமுக) சரிவர பராமரிக்காததே இந்த தீ விபத்துக்கு காரணமாகும்.

இப்போது அந்த கட்டடத்தை இடித்துவிட்டு திட்டமதிப்பீடு தயாா் செய்யுமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். அதன்படி திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டுள்ளது. எனவே, தீப்பிடித்த கட்டடத்தை இடித்துவிட்டு ரூ. 65 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT