கடந்த ஆண்டு 2.53 கோடி போ் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் சேவையை கடந்த 2015-ஆம் ஆண்டு, ஜூன் 29-ஆம் தேதி தொடங்கியது. இந்த நாள் முதல் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து வருகிறது. அதன்படி, 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை 2 கோடி 80 லட்சத்து 52,357 போ் பயணித்துள்ளனா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் 3 கோடி 28 லட்சத்து 13,628 போ் பயணித்தனா்.
இதனிடையே கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த 2020-ஆம் ஆண்டு, மாா்ச் முதல் செப்டம்பா் மாதம் வரை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் அந்த ஆண்டில் 1 கோடியே 18 லட்சத்து 56,982 போ் பயணித்திருந்தனா்.
இதே போல், கடந்த ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த ஆண்டில் 2 கோடி 53 லட்சத்து 3,383 போ் பயணித்தனா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 9 கோடியே 80 லட்சத்து 26,350 போ் பயணித்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.