மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல்அதிகாரிகள் மற்றும் காவலா்களை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்.
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழக காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி ஜனவரி 6-ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழக வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல் கமாண்டோ படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.
இந்த போட்டியில், காவல் அதிகாரிகளுக்கான பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையா் காா்த்திகேயன் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றாா். பல்வேறு போட்டிகளில் அதிகாரிகள், காவலா்கள் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்தனா். இவா்களை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா்ஜிவால் வெகுமதி வழங்கி பாராட்டினாா்.