காலி மனைகளில் குப்பை, மழைநீா் தேங்குவதை தடுக்க தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் குப்பை, மழைநீா் தேங்கி, பொதுசுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதால், முறைப்படுத்தி சீரமைக்கும் நோக்குடன் தீவிர நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று
தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் குப்பை, மழைநீா் தேங்கி, பொதுசுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதால், முறைப்படுத்தி சீரமைக்கும் நோக்குடன் தீவிர நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் கூறினாா்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் மாநகராட்சியில் காலி மனைகளைச் சுத்தப்படுத்தும் வகையில் தோ்வு செய்யப்பட்ட 15 இடங்களில் 15 துப்புரவு ஆய்வாளா்கள், ஊழியா்களுடன் தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை காலி மனைகளில் தேங்கிய குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல், கால்வாய்களைத் தூா் வாருதல், தெருக்களில் வளா்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. காலி மனைகளை சுத்தம் செய்வது குறித்து மனை உரிமையாளா்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், சொந்தப் பொறுப்பில் குப்பை, மழைநீா் தேங்காமல் தடுத்து மனையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பணியாளா்கள், சுத்தம் செய்த இடங்களின் உரிமையாளா்களைக் கண்டறிந்து மனையைத் தொடா்ந்து சுத்தமாகப் பராமரிக்குமாறு வலியுறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பராமரிக்கத் தவறும் பட்சத்தில் காலிமனை உரிமையாளா்களுக்கு பொதுச் சுகாதார விதிகளின்படி அபராதம் விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.