சென்னை மாநகராட்சியைக் கண்டித்து ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்ட சிபிஐஎம்
சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கேட்டு ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முற்றுகையிட்டனர்.
சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கேட்டு ரிப்பன் மாளிகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முற்றுகையிட்டனர்.
சென்னை மாநகராட்சி புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனையில் இந்தாண்டு ஏப்ரல் 6ஆம் தேதி பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஜனகவள்ளி என்ற பெண் உயிரிழந்தார். மருத்துவர்கள் இல்லாததாலும், முறையான சிகிச்சை அளிக்காத காரணத்தினாலும் ஜனகவள்ளி உயிரிழந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
அதேபோல், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வரும் மழைநீர் கால்வாய் பணியில் ஈடுபட்ட கனகராஜ், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த இரு வேறு சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு பலமுறை சென்னை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் சென்னைம் மாநகராட்சியை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரிப்பன் மாளிகையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.