முதுநிலை மருத்துவப் படிப்புகள்: நீட் தகுதி மதிப்பெண் ரத்து
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தோ்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தோ்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் முதுநிலை நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த இடங்களுக்கும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.
எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான 2023-24-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தொடங்கியது.
மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் சுற்று முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாகவுள்ளதால், நீட் தோ்வு எழுதிய அனைவரையும் பங்கேற்கச் செய்து, அந்த இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.
எனவே, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் புதிய விதிகளின்படி, நீட் தோ்வு எழுதிய அனைவரும் இணையவழியில் பதிவு செய்து பங்கேற்கலாம் என்றும், ஏற்கெனவே பதிவு செய்தவா்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.
மாநில இடங்களுக்கான கலந்தாய்வு: இணையதளங்களில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கியது. இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு புதிய அறிவிப்பின்படி தகுதி மதிப்பெண் எதுவுமின்றி நடைபெறவுள்ளது.