போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!
இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் பற்றி...
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆறாவது நாளான இன்று பேசிய இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு, “போர் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் இதுவரை 4,335 விமானங்களை ரத்து செய்துள்ளன. வெளிநாட்டு விமான நிறுவனங்களால் 1,187 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும், “இதில், நாம் நினைவில் கொள்ளவேண்டிய முதல் விஷயம் பயணிகளின் பாதுகாப்பு. வான்வழிப் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டால் அதில் நாம் விமானங்களைச் செலுத்த அவசியமில்லை.
போர் பதற்றம் உச்சத்தில் இருந்த நேரத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 2,19,780 பயணிகள் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் இணைந்து போர் பாதிப்பு பகுதிகளில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
அந்தப் பகுதிகளில் வான்வழிப் போக்குவரத்துப் பாதை மீண்டும் திறக்கப்பட்டால் மட்டுமே விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படும். போர் பதற்றங்களால் மேலும் பல பகுதிகள் இன்னும் கட்டுப்பாடுகளைச் சந்தித்து வருகின்றது” என்று அவர் தெரிவித்தார்.