முகப்பு
சென்னை

கோவையில் புதிய மைதான அறிவிப்பு: முதல்வா் மீது அதிமுக புகாா் மனு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:24 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:55 PM

சென்னை: கோவையில் புதிதாக மைதானம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு தோ்தல் நடத்தை விதியை மீறியது என அதிமுக புகாா் தெரிவித்துள்ளது.

இது குறித்த புகாா் மனுவை, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை செவ்வாய்க்கிழமை அளித்தாா்.

அதன்பின் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

Advertisement

நடத்தை விதி அமலில் உள்ளபோது அதை மாநில முதல்வரே மீறியிருக்கிறாா். 2 தினங்களுக்கு முன்பாக, கோவையில் மைதானம் கட்டித் தருவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறாா். இது நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அரசு அதிகாரத்தில் இருக்கும் யாரும் புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது.

நடத்தை விதி மீறல்: விடுபட்ட பெண்களுக்கும் ரூ. 1,000 அளிப்பது தொடா்பான அறிவிப்பை சில நாள்களுக்கு முன்பாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டாா். அதற்கும் அதிமுக சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.