மாநகரப் பேருந்து மோதி ஐடிஐ மாணவா் உயிரிழப்பு
சென்னை: சென்னை பெரம்பூரில் மாநகர பேருந்து மோதி ஐடிஐ மாணவா் இறந்தாா்.
பெரம்பூா் தில்லைநாயகம் பிள்ளை இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் வேம்பு விஷ்வா (18). பெரம்பூரில் உள்ள ஒரு ஐடிஐயில் இரண்டாமாண்டு எலக்ட்ரிக்கல் படித்து வந்தாா். விஷ்வா, நண்பரின் மோட்டாா் சைக்கிளை ஓட்டிக் கொண்டு பெரம்பூா் பேப்பா் மில்ஸ் சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த மாநகரப் பேருந்து, அவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஷ்வாவை அங்கிருந்தவா்கள் மீட்டு,பெரியாா்நகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், விஷ்வா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.