முகப்பு
தமிழ்நாடு

சென்னை மாநகரப் பேருந்து மாதப் பயண அட்டை இல்லையா? மக்கள் தவிப்பு!

சென்னை மாநகரப் பேருந்து மாதப் பயண அட்டை இல்லையா?

Updated On : 17 மார்ச், 2026 at 1:01 PM
கோப்புப்படம் - Photo : X / MTC
பகிர்:

சென்னை மாநகரப் பேருந்து மாதாந்திரப் பயண அட்டை வழங்கும் மையங்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ‘சென்னை ஒன்’ செயலி மூலம் பயண அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்துவதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகிறார்கள். நாள்தோறும் பயணிப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாதாந்திரச் சலுகை பயண அட்டை வழங்கப்பட்டு வருகின்றன.

குளிா்சாதன வசதி பேருந்து தவிர மற்ற அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் விருப்பம்போல் பயணிக்க மாதம் ரூ. 1,000-ம், குளிா்சாதன வசதி பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்க மாதம் ரூ. 2,000-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

Advertisement

இந்த மாதாந்திரப் பயண அட்டைகள் மூலம் 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பணமில்லா பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சார்பில் ’சென்னை ஒன்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் உள்ளிட்டவற்றில் பயணம் செய்வதற்கு சென்னை ஒன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, சென்னை ஒன் செயலி மூலமே மாநகரப் பேருந்துகளின் ரூ. 1,000, ரூ. 2,000 மாதப் பயண அட்டைகளும், புறநகர் ரயில்களின் மாதப் பயண அட்டைகளும் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

மக்கள் தவிப்பு

இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டை, ஆவடி, கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இயங்கும் மாதப் பயண அட்டை வழங்கும் மையங்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ’சென்னை ஒன்’ செயலி மூலம் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், அயனாவரம் போன்ற பிற பகுதிகளில் இயங்கும் மையங்களிலுக்குச் சென்று பயண அட்டையைப் புதுப்பித்துக் கொள்ளும்படி மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 16 ஆம் தேதி மாதப் பயண அட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலையில், பலரும் டிக்கெட் எடுத்துப் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த ரூ. 1000 மாதாந்திரப் பயண அட்டை மூலம் சென்னை மாநகரப் பேருந்துகளில் அலுவலகங்களுக்குச் செல்வோர் முதல் கூலி வேலைக்கு செல்வோர் வரை பயனிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் சேமித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பயனாளிகளில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாகவும் அவர்களிடம் ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாதவர்களாகவும், இருந்தால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தை செய்யத் தெரியாதவர்களாகவே உள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் மக்கள் எரிச்சலடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

No Monthly Travel Passes for Chennai City Buses? Commuters in Distress!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.