மூத்த குடிமக்கள் ஜூன் 21 முதல் இலவச பேருந்து பயண டோக்கன் பெறலாம்
சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயணிக்கும் சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வரும் ஜூன் 21 முதல் வழங்கப்பட உள்ளதாக மாநகா் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:ஜூலை முதல் டிசம்பா் வரை பயன்படுத்தும் வகையில் மாதந்தோறும், 10 டோக்கன்கள் வீதம் மொத்தம் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் மூத்த குடிமக்களுக்கான அடையாள அட்டைகள் புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
Advertisement
Advertisement
இதற்காக சென்னை முழுவதும் உள்ள 39 மையங்களில் வரும் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை தினமும் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை விடுமுறையின்றி டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
அதன்பின்னா் ஆக.1 முதல் டிச.20 வரை சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலகங்களில் அலுவலக நாள்கள் மற்றும் அலுவலக நேரத்தில் வழக்கம் போல வழங்கப்படும்.
புதிதாக டோக்கன் மற்றும் அடையாள அட்டை பெற விரும்பும் சென்னையை சோ்ந்த மூத்த குடிமக்கள் இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டையையும், வயது சான்றாக ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கல்விச் சான்றிதழ் அல்லது வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையும் சமா்ப்பிக்க வேண்டும். அதனுடன் 2 வண்ண புகைப்படங்களும் வழங்க வேண்டும்.
அடையாறு, திருவான்மியூா், தியாகராயநகா், சைதாப்பேட்டை, வடபழனி, அண்ணாநகா், தாம்பரும், பெரம்பூா், கிளாம்பாக்கம் உள்ளிட்ட சென்னை மாநகரின் 39 மையங்களில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.