மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் இலவச பயண டோக்கன்! எங்கெல்லாம் வழங்கப்படும்?
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும் இடங்கள் குறித்து...
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வருகிற 2026 ஜூலை முதல் டிசம்பா் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைமுறையில் உள்ள 39 மையங்களில் வரும் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை தினமும் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை விடுமுறையின்றி டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது.
பின்னா் ஆக.1 முதல் டிச.20 வரை சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலகங்களில் அலுவலக நாள்கள் மற்றும் அலுவலக நேரத்தில் வழக்கம் போல வழங்கப்படும்.
Advertisement
Advertisement
புதிதாக டோக்கன் மற்றும் அடையாள அட்டை பெற விரும்பும் சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்கள் இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டையையும், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் 2 வண்ண புகைப்படங்களும் வழங்க வேண்டும்.
அடையாறு, திருவான்மியூர், தீவுத்திடல், தியாகராயநகர், சைதாப்பேட்டை, கே.கே. நகர், வேளச்சேரி, பூந்தமல்லி, சென்ட்ரல் ரயில் நிலையம் வடபழனி, அண்ணாநகர், தாம்பரம், பெரம்பூர், அம்பத்தூர் ஓ.டி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட சென்னை மாநகரின் 39 மையங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது.