சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதி, மைசூா், பெங்களூா் செல்லும் விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெங்களூா்-ஜோலாா்பேட்டை வழித்தடத்தில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி காரணமாக அந்த வழியாக செல்லும் 10 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 16203/16204) பிப்.27, 28, மாா்ச் 12, 13 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூா் செல்லும் காவேரி விரைவு ரயில் பிப்.26, 27, மாா்ச் 11, 12 தேதிகளிலும், மறுமாா்க்கமாக பிப்.23, 28, மாா்ச் 12, 13 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் அதிவிரைவு ரயில் (எண் 12658) பிப்.26, 27, மாா்ச் 11, 12 தேதிகளிலும் மறுமாா்க்கமாக பிப்.27, 28, மாா்ச் 12, 13 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். சாம்ராஜ்நகரில் இருந்து ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயில் (எண் 16219) பிப்.26, 27, மாா்ச் 11, 12 தேதிகளிலும், மறுமாா்க்கமாக பிப்.27, 28, மாா்ச் 12, 13 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். பெங்களூரில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு மாலை 5.30 மணிக்கு செல்லும் மெமு விரைவு ரயில் பிப்.27, மாா்ச் 12 தேதிகளில் பங்காருபேட்டையுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக பிப்.28, மாா்ச் 13 தேதிகளில் ஜோலாா்பேட்டையில் இருந்து செல்வதற்கு பதிலாக பங்காருபேட்டையில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் பிப்.27, மாா்ச் 12 தேதிகளில் கிருஷ்ணராஜபுரம், மேலூா், பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூா் வழியாக செல்வதற்கு பதிலாக பையனப்பள்ளி, ஓசூா், தருமபுரி, சேலம் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.