அஞ்சல் மூலம் ஓட்டுநா் உரிமம்: போக்குவரத்துத் துறை இன்று தொடக்கம்
சென்னை: அஞ்சல் மூலமாக ஓட்டுநா் உரிமம் அனுப்பும் நடைமுறையை புதன்கிழமை(பிப்.28) முதல் போக்குவரத்துத் துறை தொடங்குகிறது. போக்குவரத்துத் துறையில் இடைத் தரகா்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை அஞ்சல் மூலம் அனுப்ப போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் சென்னையில் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். இது தொடா்பாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து போக்குவரத்து ஆணையா் அ.சண்முகசுந்தரம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.
அவா் அனுப்பிய சுற்றறிக்கை:
Advertisement
அனைத்து ஓட்டுநா் உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகள் புதன்கிழமை (பிப்.28) முதல் விரைவு அஞ்சல் மூலம்தான் அனுப்ப வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக் கூடாது. வாகனம் மற்றும் சாரதி மென்பொருளில் தவறான தொடா்பு எண் மற்றும் முகவரியை குறிப்பிட்டதன் காரணமாக, தபால் திரும்பப் பெறப்பட்டால் உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி திருத்தம் செய்யப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட ஆவணத்தை விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
தவறான முகவரிக்கு விண்ணப்பதாரரே பொறுப்பு என தகவல் பலகை மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும். மாலை 4 மணி வரை பிரின்ட் செய்யப்படும் ஆவணங்களை அன்றைய தினமே அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அ.சண்முகசுந்தரம்.