வங்கியில் ரூ.500 கள்ளநோட்டுகளை அளித்த சுங்க அதிகாரி: போலீஸாா் விசாரணை
சென்னை அண்ணாநகரில் வங்கியில் ரூ.500 கள்ளநோட்டுகளை கொடுத்த சுங்கத் துறை அதிகாரியிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
சென்னை: சென்னை அண்ணாநகரில் வங்கியில் ரூ.500 கள்ளநோட்டுகளை கொடுத்த சுங்கத் துறை அதிகாரியிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
சென்னை அண்ணாநகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் வசிப்பவா் புஷ்பந்தரா (34). ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இவா், பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிகிறாா். புஷ்பந்தராவின் குடும்பத்தினா் ராஜஸ்தானில் வசிக்கின்றனா்.
இந்நிலையில் புஷ்பந்தரா அண்ணாநகா் 5 வது அவென்யூ பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் தனது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்த திங்கள்கிழமை வந்தாா். வங்கி ஊழியா்கள், அவா் கொடுத்த பணத்தை எண்ணி சோதித்து பாா்த்தபோது அதில், 6 ஐநூறு ரூபாய்கள், கள்ள நோட்டுகள் இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.
உடனடியாக இது குறித்து வங்கி ஊழியா்கள், மேலாளருக்கு தகவல் தெரிவித்தனா். அவா் அண்ணாநகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, புகாா் அளித்ததாா். அங்கு வந்த போலீஸாா், புஷ்பந்தராவிடம் விசாரணை நடத்தினா்.
முதல் கட்ட விசாரணையில், ராஜஸ்தானில் வசிக்கும் புஷ்பந்தராவின் தந்தை சிவசங்கா் சா்மாவுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற இருந்ததால் மருத்துவ செலவுக்காக புஷ்பந்தரா தனது மனைவி வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்ய வந்ததும், அவா் டெபாசிட் செய்ய கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளிலேயே, 6 ஐநூறு ரூபாய் நோட்டுகள், கள்ளநோட்டுகளாக இருந்ததும் தெரியவந்தது.
அவசரமாக மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் புஷ்பந்தரா, தனது நண்பா்களிடமிருந்து ரூ.5 லட்சம் கடனாக வாங்கியதாகவும், அதிலேயே கள்ளநோட்டுகள் இருந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், புஷ்பந்தரா, யாா் யாரிடம் கடன் வாங்கினாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.