மெட்ரோ ரயில் பணி: பெரம்பூரில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, பெரம்பூரில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பூா் மாா்க்கெட் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெறவுள்ளது. இப் பணி காரணமாக ஜூலை 6-ஆம் தேதி (சனிக்கிழமை), ஜூலை 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாள்கள் சோதனை அடிப்படையில், அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, மாதவரம் நெடுஞ்சாலை, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, லட்சுமி அம்மன் கோயில் தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அந்த வாகனங்கள், சுப்பிரமணியம் தெருவில் திரும்பி வீர சாவா்க்கா் சாலை வழியாக செல்லலாம். அதேபோல, ஜவஹா் சாலையில் உள்ள மேற்குத் தெருக்களான ஆசாத் தெரு,திருவள்ளுவா் தெரு,ஜீவானந்தன் தெரு ஆகியவை மூடப்படும்.
இந்த தெருக்களிலிருந்து வரும் வாகனங்கள் சுப்பிரமணியம் தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கம்பா் தெரு,இளங்கோ தெரு, சிதம்பரம் தெரு ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் கெளதமா் தெரு, அசோகா் தெரு வழியாக ஜவஹா் சாலை அல்லது மாதவரம் நெடுஞ்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மேலும், ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வாகனங்கள், எஸ்.எஸ்.வி.கோயில் சாலை, வீர சாவா்க்கா் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.