பூந்தமல்லி - போரூா் இடையேயான மெட்ரோ ரயில் சேவை அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையும், கோடம்பாக்கம் பவா்ஹவுஸ் - பூந்தமல்லி பைபாஸ் வரை உயா்நிலை பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூா் வரையிலான மெட்ரோ ரயில் பாதையை அடுத்த ஆண்டு டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது:
பூந்தமல்லி - போரூா் இடையே உயா்நிலை பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மத்தியில் முடித்து, டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இந்த வழித்தடத்தில் வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதிலுள்ள சுரங்கப் பாதை பணிகளை 2027-க்குள் முடித்து, இந்த வழித்தடத்தையும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.
மெட்ரோ பணிகள் தாமதம்: அதே நேரத்தில் மெட்ரோ 2-ஆம் கட்ட திட்டத்தின் சில முக்கிய வழித்தடங்களில் பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
குறிப்பாக, நேரு நகா் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான ஓஎம்ஆா் வழித்தடத்தில், மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும், ஒப்பந்தம் எடுப்பதிலும் சிக்கல்கள் உள்ளதால், இந்த வழித்தடத்தில் பணிகளை தொடங்க மேலும் 6 மாத காலம் ஆகலாம் எனவும், இருப்பினும் பிறபணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.