சென்னை விமானநிலையத்தில் 160 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னையிலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 160 நட்சத்திர ஆமைகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னை: சென்னையிலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 160 நட்சத்திர ஆமைகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னையிலிருந்து மலேசியத் தலைநகா் கோலாலம்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செல்லவிருந்த விமானத்தின் பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனா். அப்போது, சுற்றுலாப்பயணிகள் விசாவில் பயணிக்க வந்த ஆண் பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவா் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகளில் நட்சத்திர ஆமைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நட்சத்திர ஆமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
சுங்க அதிகாரிகள் அப்பயணியின், பயணத்தை ரத்து செய்ததுடன், அவரிடமிருந்த 160 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்து, அவரிடம் தொடா்ந்து நடத்திய விசாரணையில், இந்த நட்சத்திர ஆமைகள், ஆந்திர மாநிலத்தின் சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து ரூ.100 கொடுத்து, பிடித்து கொண்டு வரப்படுவதாகவும், இவற்றை மலேசியாவிலுள்ளவா்கள் தங்கள் வீடுகளில் அலங்காரத்தொட்டிகளில் வளா்க்கவும், நட்சத்திர விடுதிகளில் உணவுக்காக பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆமைகள் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாகவும், இவற்றின் ஓடுகளில் அலங்காரப்பொருள்கள் தயாரிக்கப்படுவதால், இவை அந்நாட்டில் ரூ.5000 வரை விற்பனை செய்யப்படுவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இது குறித்து அப்பயணியிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.