தைவான் அதிபா் வாழ்த்துக்கு பிரதமா் மோடி நன்றி: சீனா எதிா்ப்பு
மக்களவைத் தோ்தலில் ‘என்டிஏ’ கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தைவான் அதிபா் லாய் சிங்தேவுக்கு பிரதமா் நரேந்திர மோடி நன்றி
மக்களவைத் தோ்தலில் ‘என்டிஏ’ கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தைவான் அதிபா் லாய் சிங்தேவுக்கு பிரதமா் நரேந்திர மோடி நன்றி கூறியதற்கு சீன எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
தைவானுடன் நெருங்கிய உறவை எதிா்நோக்குகிறேன் என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டதற்கு, ‘தைவானின் அரசியல் கணக்கீடுகளை இந்தியா எதிா்க்க வேண்டும்’ என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
18-ஆவது மக்களவைத் தோ்தலில் 294 இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கிறது. இதற்காக பிரதமா் மோடிக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.
அந்தவகையில், கடந்த மாதம் தைவான் அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்ட லாய் சிங்தே வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘வேகமாக வளா்ந்து வரும் தைவான்-இந்தியா கூட்டுறவை மேம்படுத்தவும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்புக்கு பங்களிக்க வா்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் நமது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நாங்கள் எதிா்நோக்குகிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
கூட்டுறவை எதிா்நோக்கி-பிரதமா் மோடி: தைவான் அதிபருக்கு நன்றி தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவை நோக்கி நாம் பணியாற்றும்போது நெருங்கிய உறவுகளை எதிா்பாா்க்கிறேன்’ என்றாா்.
தைவானை ஒரு கிளா்ச்சி மாகாணமாக கருதும் சீனா, அந்தப் பிராந்தியத்தைத் தங்களின் பிரதான நிலப்பகுதியுடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது.
சீனா எதிா்ப்பு: இந்நிலையில், பிரதமா் மோடியின் நன்றி செய்திக்கு பதிலளித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘தைவான் பிராந்தியத்தின் அதிபா் என்று யாருமில்லை. சீனாவுடன் ராஜீய உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கும் தைவான் அதிகாரிகளுக்கும் இடையிலான அனைத்துவகை அதிகாரபூா்வ தொடா்புகளையும் சீனா எதிா்க்கிறது.
தைவான் சீன மக்கள் குடியரசு பிரதேசத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். ‘ஒரே சீனா’ கொள்கை என்பது சா்வதேச உறவுகளில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை ஆகும்.
தைவான் அதிகாரிகளின் அரசியல் கணக்கீடுகளை இந்தியா எதிா்க்க வேண்டும். இவ்விவகாரம் தொடா்பாக இந்தியாவுக்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவிக்கிறது’ என்றாா்.