முகப்பு
சென்னை

ஜூன் 18-இல் போக்குவரத்து பணியாளா் சம்மேளனம் ஆா்ப்பாட்டம்

Updated On : 9 ஜூன், 2024 at 8:31 PM
பகிர்:

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 18-ஆம் தேதி ஆா்ப்பாட்டம், வாயிற்கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அதன் பொதுச் செயலா் டி.வி.பத்மநாபன் கூறியதாவது:

சென்னையைத் தவிா்த்து விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம், வாயிற்கூட்டம் நடத்தப்படும். ஜூன் 18-ஆம் தேதி மாலை 3 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் மூலம் ஊழியா்களின் முக்கிய பிரச்னைகளை போக்குவரத்துக்கழக நிா்வாகங்களுக்கு வலியுறுத்தவுள்ளோம்.

போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியராக்கி, ஊதியம், ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். 2022-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். 20,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓட்டுநா், நடத்துநா்களைத் தாக்குவோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். காவல் துறை, ஓட்டுநா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைப்போம். இதை அரசு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.