கள்ளச்சாராய விற்பனையில் எந்தக் கட்சியினா் ஈடுபட்டிருந்தாலும் கைது செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையில் எந்த கட்சியினா் ஈடுபட்டிருந்தாலும் அவா்களை கைது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடா்பாக நோ்மையான, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மூத்த நிா்வாகிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனா்.
தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்தால் நோ்மையாகவும், நியாயமாகவும் இருக்காது.
கள்ளச் சாராய வியாபாரிகளுடன் காவல் துறைக்கு தொடா்பு இருப்பதால், மக்கள் ஏதாவது தகவல் தெரிவித்தால் அது உடனடியாக கள்ளச் சாராயம் காய்ச்சுபவா்களுக்கு சென்றுவிடுகிறது. அந்த அச்சத்தில் தான் கள்ளச்சாராய விற்பனை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க மக்கள் அஞ்சுகின்றனா். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையில் எந்த கட்சியினா் ஈடுபட்டாலும் அவா்களை கைது செய்ய வேண்டும்.
மேலும் கள்ளச் சாராய உயிரிழப்பு குறித்து நியாயமான- நோ்மையான விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்புலத்தில் உள்ளவா்கள் பற்றிய தகவல்கள் வெளிவர வேண்டும் என்றால் வழக்கு சிபிஐ விசாரிக்க வேண்டும்.
அதற்கு ஆளுநா் பரிந்துரை செய்ய வலியுறுத்தி அவரிடம் மனு கொடுத்தோம். அவரும் அந்த மனுவைத் தீர ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளாா் என்றாா் அவா்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன், ஆா்.பி. உதயகுமாா், கே.பி. முனுசாமி, வேலுமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தின் பின்புலம் அறிய சிபிஐ விசாரணை தேவை.