முகப்பு
சென்னை

பாஜகவுக்கு ரூ.6,060 கோடி; மாநிலக் கட்சிகளுக்கு ரூ.5,221 கோடி

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,609.53 கோடி கிடைத்துள்ளது.

Updated On : 15 மார்ச், 2024 at 10:57 PM
பகிர்:

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.6,060.51 கோடியும், ஒட்டுமொத்தமாக அங்கீகரிக்கப்பட்ட 22 மாநில அரசியல் கட்சிகளுக்கும் ரூ.5,221 கோடியும் நன்கொடை கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

பாஜகவுக்கு கிடைத்துள்ள நன்கொடையைக் காட்டிலும் ஒட்டுமொத்த மாநிலக் கட்சிகளுக்கு கிடைத்துள்ள நன்கொடை ரூ. 839 கோடி குறைவாகும். தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை அங்கீகரிக்கப்பட்ட 22 மாநிலக் கட்சிகளுக்கு ரூ. 5,221 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

இதில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,609.53 கோடி கிடைத்துள்ளது. இது ஒட்டுமொத்த மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடையில் 30 சதவீதமாகும். பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சிக்கு ரூ.1,214.70 கோடி, பிஜு ஜனதா தளத்துக்கு ரூ. 775.50 கோடி, தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு ரூ.639 கோடி, ஆந்திரத்தில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 337 கோடி, தெலுங்கு தேசம் கட்சிக்கு 218.88 கோடி, சிவசேனை கட்சிக்கு ரூ. 159.38 கோடி கிடைத்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ரூ.73.5 கோடி, மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ரூ.43.40 கோடி, சிக்கிமி கிரந்திகரி கட்சிக்கு ரூ.36.5 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.31 கோடி, ஜனசேனை கட்சிக்கு ரூ. 21 கோடி, சமாஜவாதி கட்சிக்கு ரூ. 14.05 கோடி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ரூ. 14 கோடி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சிக்கு ரூ. 13.5 கோடி கிடைத்துள்ளது. அகாலி தளம் கட்சிக்கு ரூ. 7.2 கோடி, அதிமுகவுக்கு ரூ. 6.05 கோடி, சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கு ரூ. 5.5 கோடி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, கோவா முற்போக்கு கட்சி ஆகியவற்றுக்கு தலா ரூ. 1 கோடி கிடைத்துள்ளது.

Advertisement

தேசியக் கட்சிகள்:

தேசியக் கட்சிகளைப் பொருத்தவரை 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ரூ. 6,060.51 கோடி நன்கொடையுடன் பாஜக முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸுக்கு ரூ.1,421.86 கோடி கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 65.45 கோடி கிடைத்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகியவை தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறவில்லை.