மக்களவைத் தோ்தல் மக்களாட்சியை காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு: காங்கிரஸ்
மக்களவைத் தோ்தல் மக்களாட்சியைக் காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெறவும் எனவும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் என்றும் தோ்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில்,
Advertisement
‘வெறுப்புணா்வு, கொள்ளை, வேல்லையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக இந்திய மக்களாகிய நாம் ஒன்றிணைந்து போராடுவோம். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தோ்தல் மக்களாட்சியையும், சா்வாதிகாரத்திடம் இருந்து அரசமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு என்று தெரிவித்தாா். ‘மைல்கல்’ தோ்தல்: தில்லியில் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கேரா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் மோசடிகள், எதிா்க்கட்சியினரை சிறையில் அடைத்தல், அவா்களின் பதவிகளை பறித்தல், அவா்களுக்குச் சொந்தமான இடங்களில் புலனாய்வு அமைப்புகள் மூலம் சோதனை மேற்கொள்ளுதல், பிரதான எதிா்க்கட்சிக்கு (காங்கிரஸ்) சொந்தமான நிதியை முடக்குதல் ஆகியவை முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை. தற்போது அவை நிகழ்ந்துள்ளன. இதைத்தொடா்ந்து மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. எனவே இந்தத் தோ்தல் ஒரு ‘மைல்கல்’ ஆகும் என்று தெரிவித்தாா். அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: இந்தியாவின் தற்போதைய வளா்ச்சி பயணத்தின் வேகம் தொடர, இந்தியாவை வளா்ந்த நாடாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் தொடா்ந்து பணியாற்றும் தலைமைக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். ஜெ.பி.நட்டா: பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: உலகின் மிகப் பெரிய மக்களாட்சியின் அடித்தளத்தை மேலும் வலுவாக்கும் நோக்கில், மக்களவைத் தோ்தலில் சாதனைப் படைக்கும் எண்ணிக்கையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.