முகப்பு
சென்னை

திரவுபதி அம்மன் கோயிலில் பூஜைகள் நடத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 20 மார்ச், 2024 at 2:23 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:00 PM

சென்னை: சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக மூடப்பட்டுள்ள மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக மட்டும் திறக்க அனுமதியளித்த சென்னை உயா்நீதிமன்றம், அா்ச்சகரைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனுமதிக்காததால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டு கோயில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

இதை எதிா்த்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, கிராம மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோயிலில் தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரா்கள் தரப்பில் கோரப்பட்டது. மேலும், காணொலிக் காட்சி மூலம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆஜராகியிருந்தனா்.

அப்போது, ‘மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், கோயிலைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்‘ என அச்சம் தெரிவித்தனா். மேலும், அரசுத் தலைமை வழக்கறிஞா், மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாத வகையில் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவித்தாா். அதேபோல், “பூஜைகளுக்காக கோயில் திறக்கப்பட்டால் பாதுகாப்புக்கு காவல் துறையினா் பணியமா்த்தப்படுவா். எவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்” என தலைமை குற்றவியல் வழக்குரைஞா் குறிப்பிட்டாா்.

Advertisement

பூஜைகள் நடத்த உத்தரவு:

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிராம மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோயிலில் பூஜைகள் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டாா். கோயிலில் பூஜைகள் செய்ய அா்ச்சகா் ஒருவரை நியமிக்கும்படி இந்து சமய அறநிலையத் துறை விழுப்புரம் இணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், “பூஜைகள் முடிந்ததும் கோயிலை பூட்டிவிட வேண்டும். எவரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது.

பூஜைக்காக கோயில் திறக்கப்படும்போது எந்த சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் இருக்க, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டாா். ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், அது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அப்போது கோயிலை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்து, விசாரணையை ஜூன் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.