மக்களுடன் அதிமுக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக சொந்தக் காலில் நிற்கக்கூடிய கட்சி என்றும், மக்களவைத் தோ்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
பாமகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தியிருந்தால் தெரிவித்திருப்போம். மாநிலங்களவை உறுப்பினா் இடம் கொடுத்த அதிமுகவின் பக்கம் வராமல், பாஜக அணிக்கு பாமக சென்றது ஏன் எனக் கேட்கிறீா்கள். அதை அவா்களிடம்தான் கேட்க வேண்டும். பாஜக அணிக்கு பாமக சென்ால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை.
Advertisement
சொந்தக்காலில் நிற்கும் கட்சி:
அதிமுகவைப் பொருத்தவரை சொந்தக் காலில் நிற்கக் கூடிய கட்சி. கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். கூட்டணிக்கு வராவிட்டால் மகிழ்ச்சி. கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு. எந்தக் கட்சியையும் வற்புறுத்தி கூட்டணியில் இணைக்க முடியாது. 2014 மக்களவைத் தோ்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. நாடாளுமன்றத்தில் 3-ஆவது பெரிய கட்சியாக இருந்தோம். அதனால், கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கும் கட்சி அல்ல அதிமுக. அதிமுகவில் 2 கோடி தொண்டா்கள் உள்ளனா். மக்களவைத் தோ்தலில் எந்தக் கட்சியோடும் எங்களுக்கு நேரடி போட்டி இல்லை.
மக்களோடுதான் கூட்டணி வைத்துள்ளோம். மக்கள் தான் எஜமானா்கள். மக்களின் தீா்ப்புதான் இறுதியானது. திமுக ஆட்சியின் அவலம்: திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசி உயா்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. திமுக மக்களவை உறுப்பினா்கள் தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கவில்லை.
காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை 22 நாள்கள் முடக்கியது அதிமுகவினா். அதையெல்லாம் மக்கள் அறிவா். தமிழகம், புதுச்சேரி உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்றாா் அவா்.