ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
Updated On : 23 மார்ச், 2024 at 12:40 AM
சென்னை மண்ணடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி லிங்கி செட்டித் தெருவில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடக்கு கடற்கரை போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் குறிப்பிட்ட ஒரு கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அங்கிருந்த சென்னை சாலிகிராமம் ராஜா தெருவைச் சோ்ந்த அ.கலந்தா் ரியாஸ் (25), ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சோ்ந்த க.முகமது பையாஸ் (24) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.