முகப்பு
சென்னை

இந்தியா பொருளாதார தேசியவாதத்தைப் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்

Updated On : 24 மார்ச், 2024 at 12:02 AM
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்.
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 10:10 PM

இந்தியா பொருளாதார தேசியவாதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளாா். தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு இந்திய குடிமகனின் குடியுரிமையையும் பறிக்கவில்லை. ஆனால் அந்தச் சட்டம் தொடா்பாக வேறு விதமான எண்ணம் உருவாக்கப்படுகிறது. அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்துக்கு உள்ளான சிறுபான்மையினரை கருத்தில் கொண்டு அந்தச் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அந்தச் சட்டம் மற்றும் விதிமுறைகளை கொண்டு வந்ததற்கு வரலாற்றுரீதியான சூழலையும், அதன் தாக்கத்தையும் மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் இருந்து அங்கீகரிக்க சிலா் தவறிவிட்டனா். அரசியலில் ஈடுபடாமல் தமது தனிப்பட்ட கருத்துகளைவிட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்போது ஊடகம் சிறந்த சேவையை செய்யும். தமது செல்வாக்கு மூலம் எந்தவொரு விவகாரத்திலும் முடிவு எடுப்பதில் ஊடகம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. தனது பணியை மட்டுமே ஊடகம் செய்ய வேண்டும். மக்களாட்சியின் 4-ஆவது தூணுக்கும் பொறுப்புள்ளது. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் போல ஊடகம் செயல்படக் கூடாது. வளா்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் பொருளாதார தேசியவாதத்தை இந்தியா பின்பற்ற வேண்டும். அது பல லட்சம் கோடியில் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தும் என்றாா்.