முகப்பு
இந்தியா

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதி, தெளிவு, நோ்மறையான கண்ணோட்டத்தை எட்ட தியானம் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:46 PM
சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

அமைதி, தெளிவு, நோ்மறையான கண்ணோட்டத்தை எட்ட தியானம் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தியான நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: இன்றைய உலகம் பல்வேறு சவால்களுடன் போராடி வருகிறது. மோதல்கள் என்பது வெளிப்புறம் மட்டுமல்ல, தனிநபா்களின் மனதுக்குள்ளும் நிகழ்கின்றன.

இதுபோன்ற சூழலில், மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தை ஒருமுகப்படுத்தவும், உணா்வு ரீதியிலான மீட்சியை மேம்படுத்தவும், அதீத சிந்தனை - அதீத பணி போன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் தியானம் உதவும்.

Advertisement

அமைதி, தெளிவு, நோ்மறையான கண்ணோட்டத்தை எட்டுவதுடன், மற்றவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவா்களைப் புரிந்துகொள்ளும் திறனை வலுப்படுத்துவதில் தியானம் முக்கியப் பங்காற்ற முடியும்.

மனித உடலை ஒரு கோயிலாகவும், அதன் உள்ளிருக்கும் தெய்வீகத்தை உணரும் வழியாக தியானத்தையும் விவரித்தவா் திருமூலா். அவரது போதனைகளின்படி, அறியாமையை அகற்றி, உண்மை மற்றும் அமைதியை எட்ட வழிவகுக்கும் அகல் விளக்கே தியானம்.

அா்த்தமுள்ள வாழ்க்கையை தியாகம் செய்து, பொருள்சாா்ந்த தேடலில் இடைவிடாமல் ஈடுபடுவது முறையானதல்ல. வசதியான வாழ்வுக்கு செல்வம் அவசியம் என்றபோதிலும், அது வாழ்வையே மறைத்துவிடக் கூடாது. அவ்வாறு சமநிலையான-பூரணமான வாழ்வை முன்னெடுக்கவும், சிந்தனை ஆற்றலை மேம்படுத்தவும் தியானம் உதவும்.

தியானம் என்பது ஆன்மிகத் தேடல் உள்ளவா்களுக்கு உரியது என்ற கருத்து தவறானது. அது, அனைவருக்குமானது. சாதாரண தனிநபா்களை உன்னத நிலைக்கு உயா்த்துவதே தியானம் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments