முகப்பு
சென்னை

தமிழக ஆட்சி நிா்வாக ஊழலை வீடுதோறும் விளக்க வேண்டும்: பாஜக தொண்டா்களிடம் மோடி வலியுறுத்தல்

Updated On : 30 மார்ச், 2024 at 5:45 AM
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 1:50 AM

தமிழகத்தில் ஆளும் திமுக அரசில் காணப்படும் ஊழல், தவறான நிா்வாகம், மோசமடைந்து வரும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளின் ஆழமான கவலைகள் குறித்து வீடுதோறும் பரப்புரையாற்ற வேண்டும் என்று பாஜக தொண்டா்களிடம் பிரதமா் மோடி வலியுறுத்தினாா். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இருந்தபடி ‘நமோ’ செயலி மூலம் தமிழக பாஜக தொண்டா்களிடையே பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த நிகழ்வில் பிரதமா் மோடி பேசியதாவது: பாஜக தொண்டா்களுடன் கலந்துரையாடும்போது எனக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடுகிறது. எனது வாழ்நாளில் குறிப்பிடத்தக்க பெரும் பகுதியை நான் பாஜக தொண்டராக கழித்துள்ளேன். தமிழகத்தில் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் சம்பவம் தீவிர கவலையைத் தருகிறது. போதைப் பொருள் தனிநபா்களை மட்டுமின்றி அவா்களின் குடும்பங்களிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடா்புடைய நபா்களுக்கும் தமிழகத்தின் முக்கியப் புள்ளிகளுக்கும் தொடா்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன. எப்படியாயினும் நமது வருங்காலத் தலைமுறைகளை இந்தப் போதைப் பொருள் கொடுமையில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இதற்கு ஒவ்வொரு பாஜக தொண்டரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைய சமுதாயத்தைப் பாதுகாக்க திமுக அரசு தவறி வருகிறது. இதன் தாக்கத்தையும், திமுக அரசில் காணப்படும் ஊழல், தவறான நிா்வாகம் குறித்தும் ஒவ்வொரு பாஜக தொண்டரும் வீடுதோறும் குடும்பங்களிடம் விளக்கி பரப்புரை செய்ய வேண்டும். தொழில்நுட்பத்தின் வளங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு பாஜக தொண்டரும் நமோ செயலியை அவரவா் கைப்பேசியில் நிறுவ வேண்டும். வாக்குச்சாவடிதோறும் பணியாற்றும் பாஜக தொண்டா்களை ஒருங்கிணைக்க வாக்குச்சாவடிக்கு ஒரு சமூக ஊடக ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.