கேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடி
”ப்ரியப்பட்ட சகோதரி, சகோதரன்மாரே... எல்லாவருக்கும் என்றே நமஸ்காரம்!” என்று மலையாளத்தில் பிரதமர் மோடி பிரசாரம்...
திருவல்லா : கேரளத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இன்றைய தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் கேரள மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளையும் அத்துடன் ஆண்டுப் பிறப்பையொட்டி விஷு வாழ்த்துகளையும் பகிர்ந்தார்.
திருவல்லா பகுதியில் இன்று (ஏப். 4) தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவரும் பிரதமருமான மோடி, “கேரளத்திலே என்றே ப்ரியப்பட்ட சகோதரி சகோதரன்மாரே... எல்லாவருக்கும் என்றே நமஸ்காரம்!” என்று மலையாளத்தில் தமது உரையைத் தொடங்கி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியையும் (யூ.டி.எஃப்.) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியையும் (எல்.டி.எஃப்.) விமர்சித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர் பேசியதாவது : “எல்.டி.எஃப்., யூ.டி.எஃப். ஆகிய இரு கூட்டணிகளும் எஃப்.சி.ஆர்.ஏ., சிஏஏ, காஷ்மீர் ஃபைல்ஸ், கேரள ஸ்டோரி ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பொய் புரட்டுகளைப் பரப்புகின்றனர். அதுவே, அவர்களது பழக்கமாகிவிட்டது.
Advertisement
முன்னதாக, எல்.டி.எஃப்., யூ.டி.எஃப். சபரிமலை புனித தலத்தின் மகிமையைக் கெடுக்க சதி தீட்டினர். அவர்களது கொள்ளையடிக்கும் திட்டத்துக்கு இப்போதெல்லாம் கோயில் கருவறைகூட இலக்காகிவிட்டது. ஆனால், என்டிஏ அரசு அதிகாரத்துக்கு வந்தவுடன், சபரிமலையில் நடத்தப்பட்ட குற்றச்செயல்களுக்காக எல்.டி.எஃப்., யூ.டி.எஃப். தண்டிக்கப்படும்.
எல்.டி.எஃப்., யூ.டி.எஃப். ஆகிய இருமுனைகளுக்கும் எதிரான சண்டை ‘டபில்யூ.டபில்யூ.எஃப்.’ மல்யுத்தம் போன்றிருக்கிறது. அவர்கள் இருவருக்குமிடையே ரகசிய கூட்டணி அமைந்துள்ளது. ஒரே நாணயத்தின் இரு முகங்கள் அவர்களிருவரும். இதனால்தான், அவர்கள் பாஜகவை குறிவைத்து தாக்குகின்றனர். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மாறிமாறி ‘பாஜகவின் - பி டீம்’ என்று பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கே தெரியும், கேரளத்தில் ‘ஏ-டீம்’ பாஜகவே என்று.
வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்கிறது. தேர்தல்கள் வந்து செல்லும், அரசியலும் அப்படித்தான். ஆனால் என்னுடைய முதன்மை இலக்கு வளைகுடாவிலுள்ள என் சகோதர, சகோதரைகளின் பாதுகாப்பே.
எல்.டி.எஃப். அரசை அகற்றுவதற்கான கவுன்ட்டவுண் ஆரம்பமாகிவிட்டது. பாஜக தலைமையிலான என்டிஏ அரசு கேரளத்தில் ஆட்சிக்கு வரும்” என்றார்.