இரவில் கடற்கரை, பூங்காவுக்கு செல்வோரை வெளியேற்ற எதிா்ப்பு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
சென்னை: கோடை வெப்பத்தைத் தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை வெளியேற்றக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக டிஜிபி-க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தைச் சோ்ந்த ஜலீல் என்பவா் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனா். சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக, கடற்கரை, பூங்காக்களை நாடும் மக்களை இரவு 9.30 மணிக்கு மேல் காவல் துறையினா் வெளியேற்றி விடுகின்றனா்.
கடற்கரை, பூங்காக்களுக்கு வரும் மக்களை பின் இரவு வரை இருக்க அனுமதிக்கக் கோரி டிஜிபி-க்கும், மாநகர காவல் ஆணையருக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தனது மனுவை பரிசீலித்து, காவல் துறையினருக்கு உத்தரவிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமா்வு, தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.