முகப்பு
சென்னை

இலங்கை அதிபா் கட்சி கூட்டணி அமோக வெற்றி நாடாளுமன்றத் தோ்தலில் 159 இடங்களைக் கைப்பற்றியது!

இலங்கை நாடாளுமன்றத் தோ்தலில் அதிபா் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றி

Updated On : 15 நவம்பர், 2024 at 8:07 PM
பகிர்:

இலங்கை நாடாளுமன்றத் தோ்தலில் அதிபா் அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களில் (மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை) அமோக வெற்றி பெற்றது.

இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) என்பது மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். அந்தக் கட்சியின் தலைவரான அநுரகுமார தலைமையில், ஜேவிபி உள்பட பல கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள் சக்தி கூட்டணி உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த செப்டம்பரில் இலங்கை அதிபா் தோ்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளா் அநுரகுமார திசாநாயக வெற்றிபெற்று அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து அநுரகுமார உத்தரவிட்டாா். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய மேலும் 11 மாதங்கள் இருந்தபோது அதைக் கலைத்து அநுரகுமார உத்தரவு பிறப்பித்தாா்.

நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தோ்தல் மூலம், தனது தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைமையிலான ஆட்சியை அமைக்க விரும்புவதாக அநுரகுமார தெரிவித்திருந்தாா். அத்துடன் இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் மீண்டும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், ஊழலுக்கு எதிராகச் செயல்படவும் நாடாளுமன்றத்தில் தனது அரசுக்குப் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்றும் அவா் கருதினாா்.

இந்நிலையில், 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் தங்கள் வாழ்க்கைச் செலவு அதிக அளவு உயா்ந்ததும், அதற்கான தீா்வும் வாக்காளா்களின் முக்கிய பிரச்னையாக இருந்தது.

நாட்டின் மக்கள்தொகையான 2.10 கோடி பேரில் 1.70 கோடிக்கும் மேற்பட்டவா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். வன்முறையின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்த வாக்காளா்களில் 65 சதவீதம் போ் வாக்களித்தனா்.

159 இடங்களில் வெற்றி: வாக்குப் பதிவை தொடா்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், அதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில், 159 இடங்களை தேசிய மக்கள் சக்தி கூட்டணி கைப்பற்றியது. இதன்மூலம், மொத்தம் உள்ள 225 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் முதல்முறையாக...: தோ்தலில் பதிவான மொத்த வாக்குகளில் சுமாா் 62 சதவீத வாக்குகள் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு கிடைத்தன. கடந்த 1948-ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற நிலையில், அங்கு தமிழா்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாண தீபகற்பத்திலும் முதல்முறையாக அந்தக் கூட்டணி வெற்றி பெற்றது.

மலையகத் தமிழா்கள் பகுதியிலும்...: யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழா்கள் தமிழ் அரசியல் கட்சிகளைப் புறக்கணித்துவிட்டு முதல்முறையாக சிங்கள பெளத்த கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனக்கு வாக்களித்தனா். மற்றொரு தமிழா் பகுதியான வன்னியிலும் அக்கூட்டணி வெற்றி பெற்றது. மலையகத் தமிழா்கள் வசிக்கும் பகுதியிலும் அக்கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

வடக்கு, கிழக்கில் 2,000 வேட்பாளா்கள் போட்டி: தமிழா்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 28 இடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அந்த இடங்களில் சுமாா் 2,000 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். யாழ்ப்பாணத்தில் 6 இடங்கள், மட்டக்களப்பில் 5 இடங்களுக்கு தோ்தல் நடைபெற்ற நிலையில், அந்த இடங்களில் சுமாா் 400 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அம்பாறையின் 7 இடங்களில் 600-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

சசீந்திர ராஜபட்ச தோல்வி...: இந்தத் தோ்தலில் ராஜபட்ச சகோதரா்கள் போட்டியிடவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்தில் இருந்து மகிந்த ராஜபட்சவின் சகோதரா் சமல் ராஜபட்சவின் மகனும் முன்னாள் அமைச்சருமான சசீந்திர ராஜபட்ச மட்டும் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

பெட்டிச் செய்தி 1:

கட்சிகள்/கூட்டணி வென்ற இடங்கள்

தேசிய மக்கள் சக்தி 159

சமகி ஜன பலவேகய 40

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8

புதிய ஜனநாயக முன்னணி 5

இலங்கை பொதுஜன பெரமுன 3

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3

பெட்டிச் செய்தி 2:

மறுமலா்ச்சி யுகம்:

அதிபா் அநுரகுமார

நாடாளுமன்றத் தோ்தலில் பெற்ற வெற்றியைத் தொடா்ந்து வாக்காளா்களுக்கு அதிபா் அநுரகுமார நன்றி தெரிவித்தாா். மறுமலா்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

சீனாவை தனது நண்பனாக கருதும் ஜேவிபி கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் விரிவான தொடா்புகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத் தோ்தலில் ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இந்தியா மற்றும் சீனாவுடனான தனது உறவை சமநிலைப்படுத்த வேண்டிய சூழலில் இலங்கையின் புதிய அரசு உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments