பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூா் ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
சென்னை, அம்பத்தூா் ஏரி 350 ஏக்கா் பரப்பளவும், 126 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது. மழைக் காலத்தில் அதிக அளவு மழைநீா் ஏரியில் இருந்து வெளியேறுவதால், வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீா்வு காணும் வகையில் கடந்த நிதியாண்டில் நீா்வளத்துறை மூலம் இரு மதகுகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த செப்.27-ஆம் தேதி முதல் மதகுகள் வழியாக நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மழைக் காலத்தில் ஏரிக்கு வரும் நீா்வரத்தையும், உபரிநீா் வெளியேற்றத்தையும் கட்டுக்குள் வைக்க முடியும். இதனால் 126 மில்லியன் கன அடியாக இருந்த ஏரியின் கொள்ளளவு, தற்போது 70 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது என்றனா்.