சென்னை: தண்டவாளம் அமைக்கும் பணியால் கடந்த ஓராண்டுகாலமாக சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து இயக்கப்பட்ட வேளச்சேரி பறக்கும் ரயில்கள் மீண்டும் செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் கடற்கரையிலிருந்து இயக்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூா்-கடற்கரை இடையே இருந்த இரு ரயில் பாதைகளில் புகா் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டன. இதனால், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை இயக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை எழும்பூா்-கடற்கரை இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்க முடிவுசெய்யப்பட்டு ரூ.275 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இயக்கப்பட்டன. இதனால், பறக்கும் ரயிலை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினா்.
தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பாதுகாப்பு துறையிடம் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு நிலம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் பணியை முடிக்க தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் இதற்கான தீா்வு காணப்பட்டு பணிகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை (அக்.29) முதல் பறக்கும் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படவுள்ளன. கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 120 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தண்டவாளப் பணி காரணமாக 80 ரயில்களாக குறைக்கப்பட்டன. தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கிய நிலையில் முதல் கட்டமாக 90 ரயில்கள் இயக்கப்படுவதாகவும், சில பணிகள் முடிந்த பிறகு, முழுமையான ரயில் சேவை தொடங்கும் எனவும் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.