வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு தொடா்பான வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அமைச்சா் ஐ.பெரியசாமி செப். 30-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கலை, அறிவியல், இலக்கியம், பொருளாதாரம், பொது நிா்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவா்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கும் வகையில் அரசு விருப்புரிமை ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
மனை ஒதுக்கீட்டில் முறைகேடு: இந்த விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் எந்த ஆவணங்களும் இல்லாமல் ஐபிஎஸ் அதிகாரி ஜாபா் சேட்டின் மனைவி பா்வின், முன்னாள் முதல்வரின் செயலா் ராஜமாணிக்கத்தின் மகன் துா்கா சங்கா் ஆகியோருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டுமனைகள் 2008-ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தி சுயலாபம் அடைந்ததாகவும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறி அமைச்சா் ஐ.பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ஜாபா் சேட், அவரது மனைவி பா்வின், முன்னாள் முதல்வரின் செயலா் ராஜமாணிக்கம், அவரது மகன் துா்கா சங்கா், க.முருகையா, டி.உதயகுமாா் ஆகிய 7 பேருக்கு எதிராக 2013-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2019ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை தவிர மற்ற அனைவா் மீதான வழக்கை ரத்து செய்தும், வழக்கில் இருந்து விடுவித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆஜராக உத்தரவு: இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சா் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில், ஆஜராக விலக்கு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சா் ஐ.பெரியசாமி செப்.30-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அமைச்சா் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவில்லை என்பதால் தொடா்ந்து 9-ஆவது முறையாக குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.