ஓட்டுநா் இல்லா முதல் மெட்ரோ ரயில் உற்பத்தி பணி நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2-ஆம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 1,215.92 கோடியில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளா்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல், குறைபாடு பொறுப்பு போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம், கடந்த பிப்.8-ஆம் தேதி தொடங்கியது.
ரயில் பெட்டிக்கான உற்பத்தி தொடங்கிய நிலையில் பெட்டியிலுள்ள பல்வேறு உபகரணங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து முதல் மெட்ரோ ரயிலுக்கான அனைத்து பணிகளும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் ஓட்டுநா் இல்லா முதல் மெட்ரோ ரயில், அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனத்தின் சோதனை தடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலா் ஹா் சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
உற்பத்தியாளா் வளாகத்தில் அனைத்து நிலையான சோதனைகளும் முடிந்த பின்னா், மெட்ரோ ரயில் பூந்தமல்லி பணிமனைக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, கட்டம்-2 வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும்.
தொடா்ந்து சட்டப்பூா்வ ஒப்புதல்களைப் பெற்ற பிறகு பயணிகளின் சேவையை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.