சென்னையில் ஹெராயின் கடத்தல் வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஹெராயின் போதைப் பொருள் கடத்தியதாக 3 பேர் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய 4-ஆவது நபரான ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் பகுதியைச் சேர்ந்த ரவி என்ற கமால் சிங் (53) என்பவர் தலைமறைவானார்.
மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு ஹெராயினை வைத்திருந்தது தெரியவந்தது. இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய இருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.4 லட்சம் அபராதமும் விதித்தது. மற்றொருவரை விடுவித்தது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரவி, ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் பகுதியில் இருப்பதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற அந்தப் பிரிவு அதிகாரிகள், ரவியை கைது செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனர். விசாரணைக்கு பின்னர் ரவியை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அதிகாரிகள் அடைத்தனர். வழக்குப் பதியப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.