பறவைகளை தொடர்ந்து பராமரித்து வந்ததால் நுரையீரல் அழற்சிக்கு உள்ளான நபருக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சையளித்து சென்னை கிளெனீகல்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவமனையின் நுரையீரல் மாற்று சிகிச்சை மற்றும் ரோபோடிக் சிகிச்சைத் துறை இயக்குநர் டாக்டர் கோவினி பாலசுப்ரமணி கூறியதாவது:
பஞ்சாப் மாநிலம், லூதியானா நகரைச் சேர்ந்த 42 வயது நபர், பல ஆண்டுகளாக செல்லப் பிராணிகள் விற்பனையகம் நடத்தி வருகிறார். அங்கு பறவைகளை நெருக்கமாக பராமரித்து வந்ததால் அவற்றின் மூலமாக அவருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நுரையீரலில் அழற்சி மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டு நிமிஷத்துக்கு ஏழு லிட்டர் ஆக்சிஜன் செலுத்தி சுவாசிக்கும் நிலை உருவானது.
இதற்கு நுரையீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்ற சூழலில், கிளெனீகல்ஸ் மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் நுரையீரலின் இரு பக்க மடல்களும் (லோப்) பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வழக்கமான அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றினால் பிற பகுதிகளிலும் காயமோ, சேதமோ ஏற்பட வாய்ப்பு இருந்தது. இதனால் ரோபோடிக் நுட்பத்தில் லோபெக்டமி எனப்படும் நுரையீரல் மடல் நீக்க சிகிச்சை துல்லியமாக மேற்கொள்ளப்பட்டது.
ஏறத்தாழ 4 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் பயனாக அவருக்கு இயல்பாக சுவாசிக்கும் திறன் ஏற்பட்டது.அதுமட்டுமல்லாது, வழக்கமாக எடுத்துக் கொண்டிருந்த மருந்துகளின் அளவும் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டது. தற்போது அந்த நபர் நலமுடன் உள்ளார் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.