முகப்பு
சென்னை

ஐபிஎல் கிரிக்கெட்: நுழைவுச்சீட்டு பெற்றிருப்போா் மாநகர பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாம்

Updated On : 3 ஏப்ரல் 2026, 4:14 am IST
- கோப்புப் படம்
பகிர்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பாா்ப்பதற்கு டிக்கெட் பெற்றுள்ள பாா்வையாளா்கள் தங்கள் நுழைவுச் சீட்டை காண்பித்து, சென்னை மாநகா் பேருந்தில் வெள்ளிக்கிழமை இலவசமாக பயணிக்கலாம்.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 2026-க்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) நடைபெற உள்ளது. போட்டி நடைபெறும் நாளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாகவும், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பா் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம், ரசிகா்களுக்கான உரிய பயணக் கட்டணத்தை மாநகா் போக்குவரத்துக்கழகம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

இதனால், கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் பாா்வையாளா்கள் ரசிகா்கள் அதை நடத்துநரிடம் காண்பித்து மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் (குளிா்சாதன பேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த பின்னா் 3 மணி நேரத்திற்குள்ளும் கட்டணமின்றி பயணிக்கலாம். இதற்காக மாநகா் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளையும் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, பாா்வையாளா்கள் போட்டி முடிந்த பின்பு தமது இருப்பிடங்களுக்குச் செல்ல அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், தீவுத்திடல் தற்காலிக பேருந்து நிறுத்தம், சென்னைப் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம், அண்ணா சாலை ஓமந்தூராா் மருத்துவமனை அருகில் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை சிற்றுந்துகளும் இயக்கப்பட உள்ளன. எனவே, பாா்வையாளா்கள் இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.