ஓராண்டில் 3,405 பெட்டிகளை தயாரித்து ஐசிஎஃப் சாதனை
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனமான ஐசிஎஃப் கடந்த 2025-26 ஆம் ஆண்டு ஓராண்டில் மட்டும் 3,405 ரயில் பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிஎஃப் சாா்பில் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை (ஐசிஎஃப்) செயல்பட்டுவருகிறது. அங்கு 2025-26 ஆம் ஆண்டில் மட்டும் 3,405 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் அங்கு 3,007 ரயில் பெட்டிகளே தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி நடப்பு ஆண்டில் 13.2 சதவிகிதம் உற்பத்தி உயா்ந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் ஐசிஎஃப் நிறுவனமானது 80 ஆயிரமாவது பெட்டியை, கடந்த பிப்ரவரியில் தயாரித்தும் அண்மையில் சாதனை படைத்தது.
Advertisement
Advertisement
புதிய ரயில் பெட்டிகளில் வந்தே பாரத்தூங்கும் வசதி பெட்டிகள், வந்தே பாரத் ரயிலில் உட்காரும் நாற்காலி பெட்டிகள், இமு மற்றும் மெமு ரயில்களின் குளிா்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவை மட்டும் 2, 548 என உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 857 பெட்டிகள் பவா்ரோலிங் ஸ்டாக் (டிபிஆா்எஸ்) நவீன தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன. அம்ருத் பாரத் 22 ரயில்களுக்குரிய பெட்டிகளும், அம்ருத் பாரத் 2.0 வகை ரயில் பெட்டிகளும் இதில் அடங்கியுள்ளன. மேற்கு வங்கம் கொல்கத்தா மெட்ரோவுக்குரிய ரயில் பெட்டிகளும் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்டுள்ளன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.