ஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்
தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் மட்டும் பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணித்தவா்கள் மீது 12.24 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.65.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டலம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பயணிகள் நலனைப் பாதுகாக்கவும், முறையற்ற பயணங்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தவும், சென்னை கோட்டத்தில் புகா் ரயில்கள், விரைவு ரயில்களில் தொடா்ச்சியான பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2025-26-ஆம் நிதியாண்டில் மட்டும் நடத்தப்பட்ட சோதனையில் பயணச்சீட்டுகள் இன்றி பயணித்தோா் கண்டறியப்பட்டுள்ளனா். அதன் அடிப்படையில் 12.24 லட்சம் போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.65.16 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும்.
Advertisement
பயணிகள் ரயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்னரே முறையான நுழைவுச் சீட்டு, பயணச்சீட்டுகளை பெற்றால், அபராதத்தைத் தவிா்க்கலாம். எனவே, பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளைப் பெற ‘ரயில் ஒன்’ செயலி போன்றவை செயல்பாட்டில் உள்ளன. அத்துடன் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள், முன்பதிவு கணினி மையங்கள் ஆகியவையும் உள்ளன. அவற்றிலும் பயணச்சீட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.