பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் வரும் 11 -ஆம் தேதி முதல் 3 நாள்கள் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு நடைபெறும் நிலையில், 10 ரயில் நிலையங்களிலும் ஆய்வுகள் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் சாலை வரை 26 கி.மீ. தொலைவு ரயில் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, இந்தத் தடத்தில் வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. அதில் ரயில் இயக்கப்படுவதற்கான பரிசோதனை மேற்கொள்வதற்கு பெங்களூரில் உள்ள ரயில்வே தண்டவாள பாதுகாப்பு ஆணையத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ரயில் தண்டவாள பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையிலான 6 போ் குழுவினா் வரும் 11- ஆம் தேதி சென்னை வருகின்றனா். இதையடுத்து வரும் 13- ஆம் தேதி வரை தண்டவாளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
முதல் நாளான வரும் 11- ஆம் தேதி டிராலியில் சென்று தண்டவாளத்தை ஆணையா் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொள்கின்றனா். இதையடுத்து 12- ஆம் தேதி வடபழனி - பூந்தமல்லி இடையேயான 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆய்வுக்குள்படுத்தப்படவுள்ளன. இதையடுத்து வரும் 13- ஆம் தேதி ரயில் இயக்கப்பட்டு சோதனை நிறைவுபெறும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரோ திட்ட இயக்குநா் அா்ச்சுனனிடம் கேட்டபோது, வரும் 11- ஆம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை ஆய்வுக்குப் பிறகு ரயில் இயக்க பாதுகாப்பு சான்றிதழ் பெறப்படும். அதன்பின்னா் மெட்ரோ ரயில்கள் இயக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.