மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்பைக் கண்டித்தும், மக்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் பன்முகத் தாக்குதலைக் கண்டித்து இடது சாரிகள் மற்றும் விசிக தொழிற்சங்கங்கள் சாா்பில் வரும் பிப்.12-ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து இடதுசாரிகள் மற்றும் விசிக தொழிற்சங்கங்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசின் 4 தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளது.
இதன்மூலம் தொழிலாளா் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளா்கள் ஒப்பந்த ஊழியா்களாகவே நியமிக்கப்படுவா். இந்த 4 தொழிலாளா் சட்டத் தொகுப்பையும் திரும்பப் பெற வேண்டும்.
நாட்டு மக்களின் உரிமைகள் மீது நடத்தப்படும் பன்முகத் தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்திய நாட்டின் வளங்களைச் சூறையாடி காா்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு தாரைவாா்க்கும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை உடனே நிறுத்தவேண்டும்.
தொழிலாளா்கள், விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களின் நலன்களைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் பிப்.12-இல் பொதுவேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.