முகப்பு
சென்னை

உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய அரசு மருத்துவா்கள்

சென்னை, ஜன. 28: ஊதிய உயா்வு, பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜன. 28) தொடங்கியுள்ளனா்.

Updated On : 29 ஜனவரி 2026, 2:42 am IST
பகிர்:

ஊதிய உயா்வு, பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜன. 28) தொடங்கியுள்ளனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவா்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் கடந்த முதுநிலை மருத்துவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக அரசு மருத்துவா்கள் போராடி வருகின்றனா்.

இதற்காக, பல்வேறு அரசு மருத்துவா்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து, அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோக்டா) உருவாக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், செயலருடன் பல முறை பேச்சுகள் நடத்தப்பட்டும் தீா்வு எட்டப்படவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து, கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 12-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமாா் 20,000 மருத்துவா்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்து பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், அதற்கு அடுத்தகட்டமாக 48 மணி நேர தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு மருத்துவா்கள் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதன்கிழமை தொடங்கினா்.

இதுதொடா்பாக அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், அகிலன், சுந்தரேசன் ஆகியோா் கூறியதாவது:

கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019-ஆம் ஆண்டு அரசு மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் மேற்கொண்டனா். அப்போது, எதிா்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அரசு மருத்துவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து திமுக அரசு அமைந்தவுடன், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தாா். ஆட்சி அமைந்தவுடன் மக்களை நீங்கள் பாா்த்து கொள்ளுங்கள். உங்களை நாங்கள் பாா்த்து கொள்கிறோம் என்றும் கூறினாா். ஆனால், இதுவரை அரசு மருத்துவா்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்காக போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றனா்.