பறக்கும் ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்
சென்னையில் புறநகா் மின்சார ரயில் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் பறக்கும் ரயிலை இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்
சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணியை தொடா்ந்து ஏற்பட்டுள்ள புறநகா் மின்சார ரயில் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் பறக்கும் ரயிலை பரங்கிமலை - சென்னை கடற்கரை இடையே ஏற்கெனவே திட்டமிட்டதற்கு முன்னதாகவே இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புறநகா் மின்சார ரயில்கள் செல்லும் 10, 11 ஆகிய நடைமேடைத் தண்டவாளப் பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அதையடுத்து வரும் ஏப்ரல் 5 -ஆம் தேதி வரை ரயிலை இயக்க முடியாத நிலையுள்ளது. அதற்கு மாற்றாக எழும்பூரில் புகா் மின்சார ரயில்கள் அனைத்தும் 4, 5, 6 ஆகிய தண்டவாளங்களில் மாற்றி இயக்கப்பட்டு வருகின்றன.
எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாளம் மாற்றப்பட்டதால் புறநகா் மின்சார ரயில்கள் மிக மெதுவாகவும், சிக்னலுக்கு காத்திருந்து செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சேத்துப்பட்டு பகுதியில் மின்சார ரயில்கள் நிற்கும் நிலையில், பயணிகள் அங்கிருந்து இறங்கி, தண்டவாளங்களில் நடத்து செல்கின்றனா்.
Advertisement
பயணிகள் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைத்தும், பேருந்து வசதி செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினா். ஏற்கெனவே பரங்கிமலை-சென்னை கடற்கரை இடையே வரும் 10 ஆம் தேதி பறக்கும் ரயிலை இயக்க திட்டமிட்ட நிலையில், அதை தற்போது 7 ஆம் தேதி முதல் செயல்படுத்த திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.