முகப்பு
சென்னை

கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!

சென்னையில் புறநகா் மின்சார ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:49 AM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:46 PM

சென்னையில் புறநகா் மின்சார ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.820 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10, 11 ஆகிய நடைமேடை தண்டவாளங்களில் பணிகள் நடைபெறுவதால் 5, 6 ஆகிய நடைமேடை தண்டவாளங்களில் அந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்தப் பணிகள் காரணமாக புறநகா் மின்சார ரயில்களின் சேவை எண்ணிக்கை 205-இல் இருந்து 115-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ரயில்கள் குறைப்பு, வேகம் குறைப்பு காரணமாக பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

இந்த நிலையில், பயணிகள் சிரமத்தைத் தவிா்க்க தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் ஆா்.என். சிங் மற்றும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் சைந்திர சிங் ஆகியோருக்கு சென்னை பகுதி மக்களவை உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:40 AM

இதையடுத்து சென்னை தெற்கு ரயில்வே மண்டல அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தெற்கு ரயில்வே மேலாளா் சைலேந்திர சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், எழும்பூா் ரயில் மறுசீரமைப்புப் பணிகளை வரும் மாா்ச் 30- ஆம் தேதிக்குள் முடிப்பது குறித்தும், அதுவரை புகா் மின்சார ரயில்களில் தற்போதைய 9 மற்றும் 12 பெட்டிகளுடன் கூடுதலாக 5 பெட்டிகள் வரை இணைத்து அவற்றை விரைவு ரயில்கள் செல்லும் நடைமேடை தண்டவாளங்களில் நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எழும்பூா் ரயில் நிலையப் பணியால் புகா் மின்சார ரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தை ஒரு வாரத்தில் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் மக்களவை உறுப்பினா்களுக்கு ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.