சென்னை ஒன் செயலி பயனர்கள் கவனத்துக்கு..!
சென்னை ஒன் செயலியில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் பற்றி...
சென்னை ஒன் செயலியில் பயணிகளின் வசதிக்கேற்ப புதிய மாற்றத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் கொண்டுவந்துள்ளது.
சென்னையில் பொதுப்போக்குவரத்தை ஒன்றிணைக்கவும், மக்கள் பயன்படுத்த எளிதாக, நவீனமாக மாற்றும் நோக்கில் சென்னை ஒன் செயலி கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை மாநகரப் பேருந்துகள், சென்னை புறநகர் மற்றும் பறக்கும் ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டுகள் என அனைத்தையும் இந்த சென்னை ஒன் செயலி மூலம் பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில், ரூ.1000 மற்றும் ரூ.2000-க்கான மாதாந்திர பேருந்து அட்டைகளும் விநியோகிக்கப்படுகிறது.
சென்னை ஒன் செயலி மூலம் புகைப்படத்தை பதிவிட்டு மாதம்தோறும் பயண அட்டைகளை பயணிகள் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் ஏறியவுடன் சென்னை ஒன் செயலியில் உள்ள மாதாந்திர பயண அட்டையில் பயணம் செய்யக் கூடிய பேருந்தின் எண்ணை பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு முறை பயணத்தின் போதும், பேருந்தின் எண்ணை பதிவிடுவது சிரமமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இனி சென்னை ஒன் செயலியில் உள்ள மாதாந்திர பேருந்து அட்டையை மட்டும் நடத்துநரிடம் காண்பித்தால் போதும் என்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.