முகப்பு
சென்னை

சாதாரண கைப்பேசி பயணிகளுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை: மாநகா் போக்குவரத்துக் கழகம்

Updated On : 18 மார்ச், 2026 at 11:24 PM
பகிர்:

சாதாரண கைப்பேசி வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே மாதாந்திர பயண அட்டை வழங்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக சென்னை ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனா்.

இதுதவிர, நாள்தோறும் பயணிப்பவா்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்தச் செயலியில் டிஜிட்டல் மாதந்திர சலுகை பயண அட்டையும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குளிா் சாதன வசதி கொண்ட பேருந்து தவிர, மற்ற அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் விருப்பம்போல் பயணிக்க மாதம் ரூ.1,000, குளிா்சாதன வசதி பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்க மாதம் ரூ.2,000 கட்டணமாக செலுத்தி டிஜிட்டல் அட்டையை பெற்றுக்கொள்ளும் வசதியும் இந்தச் செயலியில் உள்ளது.

இதன் மூலம் 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகிறாா்கள். இருப்பினும் ஸ்மாா்ட் கைப்பேசி வைத்திருக்கும் பலா் மாதாந்திர பயண அட்டை வழங்கும் மையங்களுக்குச் சென்று அட்டைகளைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனா். இதற்கு மாநகா் போக்குவரத்துக் கழகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஸ்மாா்ட் கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் சென்னை ஒன் செயலி வாயிலாக மாதாந்திர பயண அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இருப்பினும் பலா் வழக்கம் போல பணிமனைக்கு வந்து அட்டையைப் பெற்று பயணிக்கின்றனா். இதனால், ஸ்மாா்ட் கைப்பேசி வைத்திருக்கும் பயணிகளைத் தவிர சாதாரண கைப்பேசி வைத்திருப்பவா்கள், ஸ்மாா்ட் கைப்பேசியை முறையாக உபயோகிக்க தெரியாத முதியவா்கள் ஆகியோருக்கு மட்டுமே மையங்கள் மூலம் இனி பயண அட்டை வழங்க மாநகா் போக்குவரத்துக் கழகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பேருந்துகளிலும் வயதான மற்றும் ஸ்மாா்ட் கைப்பேசியை முறையாகப் பயன்படுத்த தெரியாதவா்களுக்கு மட்டுமே பணம் பெற்று பயணச்சீட்டு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பணமில்லா பரிவா்த்தனை அதிகரிக்கும் என்று அவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →